Monday, June 3, 2019

மொழிக் கொள்கையும் தமிழுணர்வும் -1

மொழிக் கொள்கை பற்றி நடந்து கொண்டிருக்கும் பிரச்சனையில் சில நாடுகளை பற்றி நான் குறிப்பிட விரும்புகிறேன்.முதலில் அமெரிக்கா.
ஏன் அமெரிக்காவில் பிறக்கும் இந்தியா வம்சாவளி குழந்தையை நாம் ABCD(America Born Confused Desi) என்று அழைக்கிறோம். ஏனென்றால் வீட்டில் ஒரு மொழி. வெளியே வேறொரு மொழி. வீட்டில் ஒரு கலாச்சாரம். வெளியே ஒரு கலாச்சாரம். அந்த குழந்தை குழம்பிப் போகிறது.

நான் அமெரிக்காவில் பணிபுரிந்ததால் என் அனுபவத்தை பகிர விரும்புகிறேன். நான் பார்த்த வரையில் தமிழ் குடும்பத்தில் பிறந்த குழந்தை ‘அம்மா’, ‘தாத்தா’ என்று ஆர்ம்பித்து ஒவ்வொரு வார்த்தையாக பேச ஆரம்பிக்கும். பிறகு இரண்டு மூன்று ஆண்டுகளில் ஓரளவு தமிழ் கற்றுக்கொள்ளும். ஆனால் ஐந்து வயதில் பள்ளியில் காலடி வைத்தவுடன் பெற்றோர்கள் தமிழில் கேள்வி கேட்டால் குழந்தை ஆங்கிலத்தில் பதில் சொல்லும். தமிழில் பேச சொல்லி பெற்றோர்கள் எவ்வளவு வற்புறுத்தினாலும் அது தமிழில் பேசாது. அமெரிக்காவில் எல்லா மாகாணங்களிலும் தமிழ்ச் சங்கம் உள்ளது. ஏனென்றால் அங்கிருக்கும் பெற்றோர்களுக்கு நம் மொழியும் கலாச்சாரமும் நம்முடன் அழிந்து விடுமோ என்ற பதட்டம் உள்ளது. பரதம் கற்றுகொடுப்பார்கள். வயலின் கற்றுக்கொடுப்பார்கள். பட்டுப்பாவாடை அணிவிப்பார்கள். ஆனால் குழந்தைகளுக்கு தமிழ் உச்சரிப்பு மட்டும் வரவே வராது. அமெரிக்காவில் நடந்து கொண்டிருப்பது தமிழ் வகுப்பு அல்ல தமிழ் திணிப்பு.

அமெரிக்காவில் நான்கு தமிழ் குடும்பங்கள் ஒன்று சேரும்போது ‘நான் ஊர்ல இருக்கறப்போ’ என்று அவர்கள் ஆர்ம்பிக்கும் போது முகத்தை பார்க்க வேண்டும். அவ்வளவு பிராகசமாய் இருக்கும். இது நான் மிளௌரியில்(Missourie) கண்ட காட்சி. தன் ஊரை பற்றி தன்னுடைய மொழியில் பேசும் போது மட்டும் ஏன் அவர்கள் முகம் மலர்கிறது? 'when I was in my town' என்று ஆர்ம்பித்திருக்க வேண்டியதுதானே? இதற்கு விடை வேண்டுமென்றால் அதற்கு மொழி என்றால் என்ன என்று தெரிந்திருக்க வேண்டும். இதற்கான விடையை உங்கள் மூளையிடம் கேட்டால் ‘மொழி என்பது கருத்தை மனதில் உருவாக்கவும் அதை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்ள உதவும் கருவி ’ என்று தட்டையாக பதில் சொல்லும். ஆனால் மனமோ  ’மொழி என்பது உணர்வுகளின் வெளிப்பாடு’ என்று கூறும். எது சரியான பதில் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

பெற்றோர்களும் அவர்கள் சுற்றியுள்ள நான்கு குடும்பங்களும் தமிழில் பேசினால் அவர்கள் குழந்தைகளும் தமிழ் பேசும் என்று நம்புவது யதார்த்தத்தில் உண்மையில்லை. முதலில் மொழி மறையும். பிறகு உணவுப் பழக்கம் மாறும். ஏனென்றால் அமெரிக்கர்களுக்கு சமைக்கும் பழக்கும் கிடையாது. நான்காவது தலைமுறை வளரும் போது அங்கு தமிழ் குடும்பம் இருந்ததற்கு எந்த அடையாளமும் இருக்காது. இந்த உண்மை உறுத்திக்கொண்டிருப்பதால்  தான் அங்கு கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் பெரும்பாலான சர்ச்சைகள் மீண்டும் இந்தியாவுக்கு நிரந்தரமாக திரும்பிச் செல்வது பற்றியே இருக்கும்.

அமெரிக்காவில் தமிழ் கற்றல் என்பது மொழி சார்ந்த பிரச்சனை அல்ல இது நிலம் சார்ந்த பிரச்சனை. ஒவ்வொரு தலைமுறையும் முன்னேறும் போது தனக்கு  தேவையானவற்றை எடுத்துக்கொண்டு தேவையில்லாதவற்றை விலக்கிவிடும். இது இயற்கையின் நியதி. அமெரிக்க வாழ் குழந்தைகளுக்கு தமிழ் என்பது தேவையற்ற ஒன்று. அதனால் தான் பெற்றோர்களின் வற்புறுத்தலால் தமிழ் வகுப்புகளுக்கு சென்றாலும் அவர்களுக்கு அதில் நாட்டம் இருப்பதில்லை. நாளடைவில் தமிழை மறந்தும் விடுகிறார்கள்.

ஒன்றை பெற வேண்டுமானால் இன்னொன்றை இழக்க வேண்டும். இது இயற்கையின் மற்றொரு நியதி. இந்தியாவில் இருந்து அமெரிக்கா புலம் பெயர்ந்த அனைத்து குடும்பங்களும் அடைந்தது மிகப்பெரிய பொருளாதார முன்னேற்றம். இழந்தது அவர்களுடைய மொழியை. அதனோடு இயைந்த பண்பாட்டை. தான் பெற்ற நன்மைக்காக தான் இழந்தது சரியானதா என்று அவர்கள்  தான் சீர்தூக்கி பார்க்க வேண்டும்.

ஒரு மொழியை அழிக்க வெளியில் இருந்து யாரும் வரத்தேவையில்லை. உன் தாய் மண்ணை விட்டு வெளியேறினால் போதும். இரண்டு மூன்று தலைமுறைகளில் அது தானாக அழிந்து விடும். இது தான் அமெரிக்காவில் நடந்து கொண்டிருக்கிறது. அதனால் மீண்டும் ஒருமுறை கூறிக்கொள்கிறேன் மொழி கற்றல் என்பது மொழி சார்ந்த பிரச்சனையல்ல நிலம் சார்ந்த பிரச்சனை.

(தொடரும்)

1 comment:

  1. அற்புதமான பதிவு. இதனைப் பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன். இந்த காணொலி நீங்க சொல்லும் நிகழ்வை அப்படியே சொல்கின்றது. பார்க்கவும்.
    http://deviyar-illam.blogspot.com/2013/11/blog-post_4.html

    https://www.youtube.com/watch?v=c79m9YqcX5k

    ReplyDelete