Monday, April 5, 2021

அரசியல் கட்டமைப்பு-2 (என் கனவு ஜனநாயகம்)

 எனது கொள்கை Decentralization.  தமிழில் அதிகார பரவலாக்கல் என்று சொல்லலாம்.

ஒவ்வொரு தேர்தலில் போதும் இதே யோசனைதான். உண்மையிலேயே அதிகார பரவலாக்கல் என்பது பொருளாதாரத்தில் இருந்து தான் தொடங்க வேண்டும். இன்று நாம் அதிகார குவியலின் உச்சத்தில் இருக்கிறோம். மத்தியில் பாஜகவா காங்கிரஸா, மாநிலத்தில் திமுக-வா அதிமுக-வா என்று ஒருமனதாக அனைத்து தரப்பு மக்களும் யோசிக்கும் போதே அதிகார குவியலின் உச்சத்தை தொட்டு விட்டோம் என்றுதான் அர்த்தம். இந்த அதிகார குவியலுக்கு அடித்தளமாக இரு தரப்பு மக்கள் தேவை படுகிறது.


ஒன்று வறுமையில் வாடி அரசாங்கத்தை கையேந்தி நிற்பவர்கள். இன்னொன்று நான் படித்தேன் நான் சம்பாதிக்கிறேன்,என் வாழ்க்கையில் நடக்கும் நல்லது கெட்டது அனைத்திற்கும் நான் மட்டும் தான் காரணம் என்று நவநாகரிக நகர்ப்புற புத்திசாலிகள்.

சமூகம் என்று ஒன்று உண்டு. நான் நல்லாயிருக்க வேண்டும் என்றால் நான் இருக்கும் சமூகம் நல்லாயிருக்க வேண்டும். அதற்கு இந்த சமூகத்தில் உள்ள பிரச்சனைகள், அதன் மூலகாரணம், அதற்கான தீர்வுகள் பற்றி ஒரு தெளிவு இருந்து, இங்கு நடைமுறையில் உள்ள அரசியல் பற்றி புரிதல் இருக்க வேண்டும்.


இங்கு சமூகம் என்று எதை குறிப்பிடுகிறேன்?

சாதியா? இல்லை, மதமா? இல்லை, மொழியா? இல்லை, திராவிடமா? இல்லவே இல்லை. சமூகம் என்பது எனது ஊர். என் சொந்த ஊர் ஈரோடு. நான் படித்து வளர்ந்தெல்லாம் ஈரோடு தான். ஆனால் ஈரோட்டை பற்றி அதிகபட்சமாக பத்து சதவிதம் தான் தெரியும்.

உண்மையில் அரசியல் மாற்றம் வேண்டுமென்று என்று ஒருவன் விரும்பினால், தன் ஊரை பற்றி தான் முதலில் தெரிந்து புரிந்து கொள்ள வேண்டும். உலக அரசியல், இந்திய வரலாறு, சே குவாரா, கம்யூனிசம் பற்றி படிப்பது ஒருவன் தன்னை அறிவாளியாக காட்டிக்கொள்ள உதவுமே தவிர எந்த மாற்றத்தையும் கொண்டு வராது.அர்ஜென்டினாவில் பிறந்த சே குவாராவிற்கு வேண்டுமானால்

க்யூபாவில் மாற்றத்தை கொண்டு வர காலம் அமைந்திருக்கலாம். ஆனால் பெரும்பான்மையோர் மாற்றம் வேண்டும் என்று  நினைக்கும் இக்காலத்தில், பெரும்பான்மையோர் இந்த மாற்றத்தில் பங்கு கொள்ள தன் ஊரில் இருந்து தான் தொடங்க வேண்டும்.

மாற்றம் என்று தன்னிடமிருந்து, தான் இருக்கும் இடத்திலிருந்து தான் தொடங்க வேண்டும்.


அதிகார குவியலில் பொருளாதாரம் எவ்வாறு செயல்படுகிறது?

சாமனிய மக்கள் அனைவரும் அரசாங்கத்திடம் வரி செலுத்துகிறோம். அது நேரடியாக மத்திய அரசுக்கு செல்கிறது. அதில் பங்கு பிரித்து அலைக்கழித்து மாநில அரசுக்கு தருகிறது. மாநில அரசிடமிருந்து அந்த பணம் அடித்தட்டு மக்களின் நலத்திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டு, அது அந்த மக்களின் கைக்கு சென்று சேர்வதற்குள் இருபது கைகள் மாறிவிடுகின்றன. மாநிலத்தில் இருக்கும் ஒரு அமைச்சர் பல்லாயிரம் கோடி ஊழல் செய்கிறார் என்றால் அதற்கு இந்த பொருளாதார கட்டமைப்பு மிகவும் துணை புரிகிறது. 


மக்களுக்கான பல நல்ல திட்டங்கள் இருக்கிறது. அதற்கான நிதியும் ஒதுக்கப்படுகிறது. ஆனால் மக்களிடம் அந்த திட்டம் முழுமையாக சென்று சேருகிறதா? மக்களுக்கு கொடுக்கப்படும் பொருட்களும் சேவைகளும் தரமாக இருக்கிறதா என்றால் அது கேள்விக்குறியே.

இதை எப்படி சரி செய்வது? கையேந்தும் மக்கள் ஏதாவது கிடைத்தால் போதும் என்று நினைக்கிறார்கள். பொருளாதாரத்தில்  மேன்மை அடைந்தவர்கள் நான் என் வரியை ஒழுங்காக கட்டிவிட்டேன் அதனுடன் என் கடமை முடிந்தது என்று நினைக்கிறார்கள்.

இப்படி இருக்க நலத்திட்டங்களை கொடுப்பவன் கொள்ளையடிக்க தானே செய்வான்.

நகர்ப்புறத்தாரின் சமூக அக்கரை- இப்போது சமீபத்தில் நடந்த் ஜல்லிக்கட்டு போராட்டம், சென்னை வெள்ளப்பெருக்கு போன்றவை நகரத்தார் இடையை சமூக அக்கரையை கொண்டு வந்துள்ளது உண்மையில் சந்தோஷம் அளிக்கிறது. சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள நண்பர் வார இறுதியில் மரம் நடுவதற்கு செல்வது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் இது தொடக்கம் மட்டும் தான். 

அறப்போர் இயக்கம் போன்றவர்கள் RTI மூலம் அரசில் நடக்கும் ஊழல்களை வெளிக்கொண்டு வருவது, உண்மையில் பாரட்டதக்கது. ஆனால் இது பெரும்பான்மையான மக்களின் கடமையாக மாற வேண்டுமென்றால் வரி செலுத்தும் போதே அதில் சமூக பொறுப்பையும் உள்ளடக்க வேண்டும். எவ்வாறு? ஈரோட்டில் புதிதாக ஒரு அரசு பள்ளி கட்டப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம்.

எனக்கு குறுஞ்செய்தி வருகிறது 'நீங்கள் செலுத்திய வரிப்பணத்தில் உங்கள் ஊரில் அரசு பள்ளி கட்ட உபயோகப்பட்டுள்ளது. நாளை அதன் திறப்பு விழா. குடும்பத்துடன் கலந்து கொள்ளவும்'. அது அளப்பரிய ஆனந்தத்தை கொடுக்கும். நிச்சயமாக அதன் திறப்பு விழாவிற்கு செல்வேன். என கண்ணிற்கு அது அரசு கட்டிய அரசாங்க பள்ளியாக தெரியாது. அரசு கட்டிய என் பள்ளியாக தான் தெரியும். 

சில மாதங்களில் அந்த பள்ளி தரமற்றதாக கட்டிய விபரம் தெரியவருகிறது. இப்போது என்ன செய்வேன்? இதுவரை அரசாங்கத்தை குறை கூறுவதை மட்டுமே செய்து கொண்டிருந்த நான், இந்த அரசு பள்ளியில் தரமான கட்டிடமும் தரமான கல்வியும் எவ்வாறு தருவது என்று யோசிப்பேன். இது தனிமனிதனாக செய்ய முடியாது ஆகையால் இந்த பள்ளி கட்ட யாருடைய வரிப்பணமெல்லாம் செலவிடப்பட்டுள்ளது என்று தேடுவேன். அவர்கள் ஒன்றிணைத்து whatsapp குழு ஒன்று உருவாக்குவேன். RTI மூலம் தேவையான

தகவல்கள் சேகரிப்பேன். இப்போது குழுவாக உள்ள நாங்கள், அரசிடம் அழுத்தம் கொடுப்போம். இப்படி அரசு பள்ளிகள் ஒவ்வொன்றிக்கும்

ஒரு whatsapp குழுக்கள் இருக்கும். இவர்கள் அனைவரும் கொடுக்கும் அழுத்தத்தில் அரசு தானாக தரமான கல்வி கொடுத்து தான் ஆக வேண்டும்.

இப்போது நடைமுறை எப்படி இருக்கிறதென்றால் ஸ்டாலினோ சீமானோ எடப்பாடி பழனிசாமியோ ஒருவர் முதல்வராக வந்தால் அந்த ஒருவரே தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து விடுவார் என்ற நம்பிக்கை. இது தமிழ் சினிமாவை பார்த்து நமக்கு ஏற்பட்ட மன்ப்பிறழ்வு. ஒரு ஹீரோவே எல்லா வில்லன்களையும் அடித்து விரட்டுவது சினிமாவில் மட்டும் தான் சாத்தியம்.

நிஜ வாழ்க்கையில் ஒரு சிறிய பிரச்சனை தீர்ப்பதற்கே பல பேர் ஒன்று சேர வேண்டும்.


கனவு தொடரும்-------

ரமேஷ் தியாகராஜன்.


Friday, July 26, 2019

அரசியல் கட்டமைப்பு - 1

என் பெயர் ரமேஷ் தியாகராஜன். எனது கொள்கை அதிகார பரவலாக்கல். ஆங்கிலத்தில் Decentralization என்று சொல்லலாம். நான் விரும்பும் பொருளாதாரம் கிராமிய பொருளாதாரம். எனக்கு பிடித்த பொருளாதார நிபுணர் ஜெ.சி.குமரப்பா. இந்த தெளிவு ஏற்பட எனக்கு 35 வருடங்கள் ஆகியது.

இங்கு தேசியவாதம், மொழிவாதம், மதவாதம், சினிமா, அரசியல், கிரிக்கெட் என்று பலவித வண்ணக்கண்ணாடிகள் இருக்கின்றன. இதின் ஏதேனும் கண்ணாடி எடுத்துக் மாட்டிக் கொள்பவன் வாழ்க்கை முழுக்க ஒரு தலை பட்சமாக பேசித்தான் ஆக வேண்டும். இந்தியனா தமிழனா, மதமா சாதியா, விஜய்யா அஜித்தா, ஸ்டாலினா சீமானா, கோலியா தோனியா இப்படி ஏதேனும் சார்பெடுத்து பேசுபவனை பாரத்தால் கண்ணாடி அணியாதவனுக்கு வேடிக்கையாகத்தான் இருக்கும். மஞ்சள் கண்ணாடி அணிந்தவனுக்கு உயிருள்ளவரை உலகம் மஞ்சளாகதான் இருக்கும். கண்ணாடி அணியாதவனுக்கு உலகம் உள்ளது உள்ளபடி பல வண்ணங்களாக தெரியும்.

சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஒரு வசனம் - ‘இந்தியன்னா பெருமை கொள்ளனும்
தமிழன்னா தலை நிமிர்ந்து நிக்கனும்
ஆனா சாதி சொன்னா வெட்கப்படணும்...எல்லாமே கூட்டம் தானே. அது பெருசு இது சிறுசு!!!
தேசத்துக்கு பக்தி,
மொழிக்கு பற்று,
ஆனா சாதிக்கு வெறி!!!’. திருக்குறளை போன்றே மிக ஆழ்ந்த அர்த்தமுள்ள வசனம். எந்த கூட்டத்தில் நான் என்னை அடையாளப்படுத்திக் கொள்கிறேனோ அந்த கூட்டத்தின் எண்ணிக்கையை பொறுத்தே எனக்கான நியாய தர்மங்கள் இங்கு வகுக்கப்பட்டுள்ளன. பைபிளின் வசனம் பேசாமல் இங்கு யாரும் அமெரிக்கா ஜனாதிபதி ஆக முடியாது. இந்துத்துவா பேசாமல் மோடியால் பிரதமாராக முடியாது. ஒரு நாட்டின் தலைவன் மக்கள் நலனை முன்னிறுத்தாமல் ஏன் மதத்தை முன்னிறுத்துகிறான்? காரணம் மதம் மக்களுக்கு புரியாது. ஆனால் மக்கள் அதை நம்புவார்கள். புரியாத மதத்தை ஏன் மக்கள் நம்ப வேண்டும்? அப்பொழுது தான் தேசம் என்ற கட்டமைப்பை நம்புவார்கள். தேசப்பற்றை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பது கடினமான காரியம். ஆனால் கோயில்கள் மூலம், சடங்குகள் மூலம் மதத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கலாம். இந்தியா இந்து மதத்தை தழுவியது. பாகிஸ்தான் இஸ்லாமிய மதத்தை தழுவியது. இலங்கை புத்த மதத்தை தழுவியது. இப்படி ஒவ்வொரு நாடும் அதற்கான மதத்தையும் சொல்லிக்கொண்டே போகலாம். நாடும் மதமும் வேறுவேறல்ல. இரண்டும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்.

சரி. இந்துவாக பிறந்ததில் பெருமை கொள்கிறீர்களா? அப்படியெனில் பகவத் கீதையில் இருந்து ஒரு ஸ்லோகம் சொல்லுங்கள்? தெரியவில்லையா. சரி. வேதத்தில் இருந்து ஒரு வரி சொல்லுங்கள்? தெரியவில்லையா. பரவாயில்லை. உங்களுக்கு என்ன தெரியும் என்று சொல்லட்டுமா? எல்லொருக்கும் சொந்த ஊர் என்று உண்டு. அந்த ஊரில் மாரியம்மன் கோவில் என்று ஒன்று உண்டு. திருவிழாவின் போது எல்.ஆர்.ஈஸ்வரியின் ‘செல்லத்தா செல்ல மாரியத்தா, எங்க சிந்தையில் வந்து அரை வினாடி நில்லாத்தா’, ‘கற்பூர நாயகியே கனகவல்லி, காளி மகமாயி கருமாரியம்மா’. பக்கத்து வீட்டுக்காரருடன் பழனிக்கு பாத யாத்திரை போயிரிப்பீர்கள், டி.எம்.எஸ்ஸின் ‘அழகென்ற சொல்லுக்கு முருகா’ பாடல் கேட்டிருப்பீர்கள். இதுதான் நமக்கு தெரிந்த இந்து மதமும் பக்தியும். ஆனால் இதை வைத்து அரசியல் செய்ய முடியாது.

நான் தமிழ் தேசியத்திற்கு ஆதரவாக பேசுகிறேன் என்று நினைத்தால், தமிழ் தேசியவாதிகளை எங்கிருந்தாலும் உடனே மேடைக்கு அழைக்கவும். நாலடியாரிலிருந்து நான்கு வரிகள் கூறவும்?...தெரியவில்லையா. பரவாயில்லை கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும் என்பார்களே, எங்கே கம்பராமயணத்திலிருந்து ஒரு பாடல் சொல்லவும்? ஞாபகம் வரவில்லையா. பரவாயில்லை. எட்டுத்தொகை பத்துப்பாட்டு பதிணெண் கீழ்கணக்கு என்பார்களே. அவை யாவை என்று தெரியுமா? கவலைப்பட வேண்டாம். எனக்கும் இது எதுவும் தெரியாது. முதல் வகுப்பில் குறள் படிப்பதால் அது மட்டும் கொஞ்சம் தெரியும். தமிழனாக பிறந்ததால் இவையனைத்தையும் மாய்ந்து மாய்ந்து படிக்க வேண்டிய அவசியம் இல்லை. அது தமிழ் பண்டிதர்களின் வேலை. இப்படி தமிழ் பெருமை பேசும் எந்த நூலும் நாம் மனதில் நிற்காத போது நாம் எப்படி தமிழ் தேசியத்திற்கு மயங்குகிறோம். பொதுமக்களுக்கு எது தெரியாதோ எது புரியாதோ அதை வைத்து தான் அரசியல் நடத்த முடியும். இது அரசியலின் அடிப்படை விதி. இது திராவிட கட்சிகளுக்கும் பொருந்தும்.
மொழி என்பது மாநில அரசியல் மட்டும் அல்ல. அது சூழ்நிலைக்கேற்றவாறு தேச அரசியலாகவும் மாறும். இஸ்லாமிய மதத்தை முன்னிறுத்தி முதலில் கிழக்கு வங்கம் உருவானது. பிறகு உருது மொழி திணிக்கப்பட்டதால் வங்காள தேசம் என்று மொழியை அடிப்படையாக கொண்டு தேசம் உருவானது.
இதிலிருந்து தேசம், மதம், மொழி, அரசியல் எவ்வாறு பின்னிப்பிணைந்துள்ளது என்பது மக்களுக்கு புரியும்.

உங்கள் வாழ்க்கையை சற்றே திரும்பிப் பார்த்து தேசப்பற்று மிக்க காரியங்கள் என்னவெல்லாம் செய்துள்ளீர்கள் என்று யோசித்துப் பாருங்கள். இரண்டு விஷயங்களை செய்து இருப்பீர்கள். ஒன்று பள்ளியிலோ திரையரங்கிலோ ஜன கன மன என தேசிய கீதம் பாடும் போது அசையாமல் நின்று இருப்பீர்கள். இன்னொன்று கிரிக்கெட் போட்டியில் இந்தியா பாகிஸ்தானை வெல்லும் போது துள்ளிக்குதித்து உங்கள் தேசப்பற்றை வெளிப்படுத்தி இருப்பீர்கள். VGP, Kishkinta போன்ற தீம் பார்க் சென்றால் அங்கு நீர் விளையாட்டு இருக்கும். ஒரு படகில் மெதுவாக உச்சிக்கு கொண்டு செல்வார்கள். உச்சிக்கு சென்றவுடன் அந்த படகு அதி வேகமாக நீருக்குள் பாய்ந்து செல்லும். அப்போது கிடைக்கும் திரில், இந்தியா கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து வெற்றி பெறும் திரில்லை விட பல மடங்கு அதிகம். நல்ல வேலையாக தீம் பார்க்கில் என்னுடைய தேசப்பற்று பல மடங்கு அதிகரித்து விட்டது என்று எண்ணாமல் இருந்தீர்களே. அது வரை மகிழ்ச்சி. கிரிக்கெட்டில் இந்தியா ஜெயித்தால் தேசப்பற்று, சென்னை சூப்பர் கிங்ஸ் ஜெயித்தால் மாநிலப்பற்று. அருமை. உங்கள் பற்றை நினைத்து புல்லரிக்கிறேன். உங்கள் மனசாட்சியை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள் கிரிக்கெட்டில் ஜெயிப்பதற்க்கும் தேசப்பற்றுக்கும் ஏதேனும் சம்மந்தம் இருக்கிறதா என்று.
அடுத்தது தேசிய கீதம். உங்கள் வாழ்க்கையில் எத்தனை முறை தேசிய கீதம் கேட்டிருப்பீர்கள். என்றாவது ஒரு நாள் அதன் அர்த்தம் என்னவென்று யோசித்திருப்பீர்களா??  ஏன்  யோசிக்கவில்லை? ஏனென்றால் அது தேவையில்லை. தேசிய கீதத்திற்கு நிற்கவில்லையென்றால் அது தேசத்தை அவமதிப்பது என்று பயிற்றுவிக்கப்பட்டுள்ளீர்கள். அதனால் எழுந்து நிற்கிறீர்கள். எல்லோரும் நிற்கிறார்கள் அதனால் நீங்களும் நிற்கிறீர்கள். அதுவே உண்மை.

பிரச்சனையில்லாத உலகத்தை உருவாக்க முடியும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் கூட்டத்தின் அளவை பொருத்து பிரச்சனையின் அளவும் பெரிதாக இருக்கும் என்பதை நம்புகிறேன். என்னுடைய கனவு நாம் தேச அளவிலோ, மாநில அளவிலோ, சாதி அளவிலோ ஒன்றாக இணைவதை விட ஊர் அளவில் ஒன்றாக இணைவதுதான் பொருத்தமாக இருக்கும் என்று எண்ணுகிறேன். இரு ஊருக்கு இடையே ஒரு வாய்க்கால் சண்டை வருகிறது என்று வைத்து கொள்வோம். இரு ஊருக்குமிடையே கலவரம் வெடித்தால் அங்கு சண்டை போடும் ஒவ்வொருவருக்கும் யாரு நம்ம ஊர்காரன் யார் அடுத்த ஊர்காரன் என்பது தெளிவாக தெரியும். ஏனென்றால் ஒருவரையொருவர் தெரிந்து கொள்வது அவர்கள் வாழும் வாழ்வியலோடு இயல்பாக வருவது. ஆனால் ஒரு தேசத்திற்காக போருக்கு சென்றால் நீங்கள் இந்தியனா, பாகிஸ்தானா என்பதை உங்கள் உடை தான் தீர்மானிக்கும். நீங்கள் இந்திய ராணுவ உடை அணிந்தால் இந்திய வீரர். பாகிஸ்தான் உடை அணிந்தால் பாகிஸ்தான் வீரர். அவ்வளவே.

பள்ளிகளில் எதற்கு யூனிபார்ம் உடை கொடுக்கிறார்கள்?
ஏழை பணக்காரன் வித்தியாசம் தெரியக்கூடாது என்பதற்க்காக.
மிக அருமையான பதில். உங்கள் மனசாட்சியிடம் கேட்டுப் பாருங்கள். நீங்கள் பள்ளியில் படிக்கும் போது உங்களுடன் படித்த மாணவர்களில் யார் பணக்காரன்? யார் ஏழை என்று உங்களுக்கு தெரியாதா? ஒரு மாணவன் அணிந்திருக்கும் கை கடிகாரம், அவன் உபயோகிக்கும் ஸ்கூல் பேக், லஞ்ச் பாக்ஸ், மாலை நேரத்தில் அவனை கூட்டி செல்ல வரும் வாகனம் சைக்கிளா, காரா என்பதை வைத்து அவன் பணக்காரானா ஏழையா என்பது முதல் நாளே அப்பட்டமாக தெரிந்துவிடும். ஒரு ஆங்கிலப் பள்ளியில் ஏழைகளை மட்டும் துல்லியமாக கண்டுபிடிக்க வேண்டுமா. அதற்கு ஒரு வழி இருக்கிறது. ஒவ்வொரு காலாண்டு முடிவிலும் கல்விக் கட்டணம் செலுத்தாதவர்கள் என்று ஒரு பட்டியல் தயாரிக்கப்பட்டு ஒவ்வொரு வகுப்புக்கும் அனுப்பப் பட்டு அந்த மாணவர்களின் பெயர் அனைவரின் முன்பும் வாசிக்கப்படும். அது தான் எப்படியாவது படித்து முன்னேறி வெற்றி பெறலாம் என்று கனவு காணும் ஏழை அல்லது நடுத்தர கூட்டம். இப்படி இருக்க யூனிபார்ம் என்பது ஏழை பணக்காரன் வித்தியாசம் தெரியக்கூடாது எனபதற்காக கொடுக்கப்பட்டது என்று சொல்வது வேடிக்கையாக இல்லை.

ஒரு தேசத்தின் கட்டமைப்பில் நாம் அணியும் உடை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. வெள்ளை உடை அணிந்தால் மருந்துவர். காக்கி உடை அணிந்தால் காவலாளி. கருப்பு அங்கி அணிந்தால் அவர் வக்கில். நீங்கள் உண்மையில் மருத்துவராக இருந்து மக்களுக்கு சேவை செய்ய நோக்கத்துடன் தனியாக க்ளீனிக் வைத்தால், வெள்ளை உடை அணிய தேவையில்லை. ஏனென்றால் அந்த ஏரியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் தெரியும் நீங்கள் டாக்டர் என்று தெரியும். அதுவே நீங்கள் மல்டிஸ்பெஸாலிட்டி மருத்துவமனையில் வேலை செய்தால் நிச்சயமாக வெள்ளை உடை அணிய வேண்டும். ஏனென்றால் அங்கு சம்பளத்திற்கு வேலை பார்க்கும் பல மருத்துவர்களில் நீங்களும் ஒருவர். மேனஜ்மென்ட் சொல்லும் மருந்துகளை சிபாரிக்க வேண்டும். அவர்கள் சொல்லும் நேரத்தில் வர வேண்டும் போக வேண்டும். இது சரிதானா என்று சிந்தியுங்கள்.

ஐடி துறையில் வேலை செய்பவரா நீங்கள்? மற்ற துறை போன்று உங்களுக்கென்று யூனிபார்ம் உடை இல்லை என்று பெருமை படுகிறீர்களா? நிற்க!!!
மற்ற துறையிலாவது யுனிபார்ம் உடை அணிந்தாலும் அவனுக்கென்று சொந்தமாக ஒரு பெயர் இருக்கிறது. ஆனால் ஐடி துறையில் நீங்கள் கம்பெனிக்குள் நுழையும் முன் கார்த்திக். நுழைந்த பிறகு 845679(ஏதோ ஒரு நம்பர் மட்டுமே). எங்கெல்லாம் நீங்கள் உடைகளாகவும் நம்பராகவும் மாற்றப் படுகிறீர்களோ அங்கெல்லாம் உங்களுடைய தனித்தன்மைக்கு ஆப்பு வைத்து விட்டீர்கள் என்று அர்த்தம். அப்படியென்றால் ஆதார் நம்பர் எதை குறிக்கிறது என்று சிந்தியுங்கள்.

கிராமிய கலைகளுக்கும் சினிமாவிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஒன்றின் வீழ்ச்சி. மற்றொன்றின் வளர்ச்சி. கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், நாடகம், பறையாட்டம், வில்லுப்பாட்டு என்று பன்முகமாகமான கிராமிய கலைகளை ஒன்றாக குவித்து பொழுதுபோக்கு குவியலாக உருவானதே சினிமா. ஒரு நாட்டுபுறக் கலை நிகழ்ச்சி ஒரு கிராமத்தில் நடக்கிறதென்றால் அங்கு அந்த கலைக்காக ஒரு குடும்பம் வாழ்கிறது என்று அர்த்தம். அவ்வாறு தமிழகத்தில் உள்ள பத்தாயிரம் கிராமங்களிலும் பத்தாயிரம் கலைக்குடும்பங்கள் இருந்த காலம் இருந்தது. வருமானம் சொற்பமாக இருந்தாலும் குடும்ப நடத்த போதுமானதாக இருந்திருக்கும். ஆனால் சினிமா வந்த பிறகு சினிமா நடிகர்கள் கோடிகளில் புரண்டார்கள். கிராமியக் கலைக் குடும்பங்கள் நாசமாயின. சினிமா என்பது போலி பிம்பங்களை உருவாக்க தடம் அமைத்தது. சினிமாவிற்கும் அரசியலுக்கும் ஆன தொடர்பு நீங்கள் அறிந்ததே.

இங்கு கிரிக்கெட் என்பது தேசிய அரசியல். சினிமா என்பது மாநில அரசியல்.
இப்படி கிரிக்கெட் மூலம் தேசப்பற்றை வளர்த்து, புரியாத மதத்தால் நாட்டை ஒருங்கிணைத்து, தெரியாத மொழியின் வளத்தால் மாநிலத்தை ஒருங்கிணைத்து, சினிமா மூலம் போலி பிம்பங்களை உருவாக்கி அவர்களை முதல்வர் நாற்காலியில் உட்கார வைப்பதே இங்குள்ள அரசியல் கட்டமைப்பு. மக்கள் எல்லாம் வெறும் ஆதார் நம்பர்களே!!!!


(தொடரும்)

Thursday, June 6, 2019

மொழிக் கொள்கையும் தமிழுணர்வும் - 2

1955 ஆம் ஆண்டு ஆட்சி மொழி ஆணையம் ஒன்றை நியமிக்கிறார் அன்றைய குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத். இந்தியை கட்டாயமாக்க வேண்டும் என்ற ஆணையத்தின் பரிந்துரையை நாடாளுமன்றத்தில் முன்வைத்த போது இருவரைத் தவிர அனைவரும் மகிழ்ச்சுயுடன் ஏற்றுக்கொள்கின்றனர் . ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்த சுப்பராயன் மற்றொருவர் மேற்கு வங்கத்தின் சுனிதா குமார் சாட்டர்ஜி. 29 மாநிலங்களை கொண்ட இந்தியாவில் ஏன் இந்த இரண்டு மாநிலங்கள் மட்டும் இந்தியை பார்த்து அஞ்சுகின்றன?  அதற்கு காரணம் இந்த இரு மாநிலங்களுக்கென்று ஒரு தனித்தன்மை உண்டு. தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் மட்டும் தான் இந்தியாவை தவிர்த்து தன் மொழியை பேசும் மற்றொரு நாடு ஒன்று உண்டு. வங்காள மொழி மேற்கு வங்கத்திலும், வங்காள தேசத்திலும்(பங்களாதேஷ்) பேசப்படுகிறது. தமிழ் மொழி தமிழ்நாட்டிலும் இலங்கையில் ஈழத்தமிழர்களாளும் பேசப்படுகிறது. இந்த இரு மொழிகள் மட்டும் தான் மொழிப்போரை சந்தித்துள்ளது.

அன்று வங்காள தேசம் பாகிஸ்தானின் ஒரு அங்கமாக இருந்தது. கிழக்கு வங்கம் என்று அழைக்கப்பட்டது. 1948  ஆம் ஆண்டு பாகிஸ்தான் உருது மொழியை மட்டும் தேசிய மொழியாக அறிவிக்கிறது. கிழக்கு வங்கம் கோபம் கொண்டது ஏனென்றால் அங்கு 98% மக்கள் வங்காள மொழியை பேசுபவர்கள். அவர்களால் உருதுவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 1952-இல் டாக்கா பல்கலைக்கழக மாணவர்கள் உருது மொழிக்கு எதிராக போராடுகிறார்கள். அதில் வன்முறை வெடித்து மாணவர்கள் சுட்டுக்கொல்லப்படுகிறார்கள். கிழக்கு வங்கம் முழுதும் கலவர பூமியாக மாறுகிறது. வருடக்கணக்கில் நடந்த போராட்டங்களும் கலவரங்களும் அரசை அடி பணியச் செய்தது. 1956 ஆம் ஆண்டு வங்காள மொழிக்கு ஆட்சி மொழி அந்தஸ்து வழங்கப்படுகிறது. இந்த பின்னனியில் பார்த்தால் ஏன் 1955 ஆம் ஆண்டு இந்தியாவில் ஆட்சி மொழி ஆணைய பரிந்துரையை மேற்கு வங்கம் எதிர்த்தது என்பது புரியும்.

1919 ஆம் ஆண்டு இலங்கையில் சர் பொன்னம்பலம் அருணாசலம் என்ற தமிழர் தலைமையில் சிலோன் தேசிய காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. இது தமிழரும் சிங்களரும் தனித்தனியே ஆங்கிலேயருக்கு எதிராக நடத்திய பல இயக்கங்களை உள்ளடக்கியது. இவ்வாறு அனைவரும் ஒன்றிணைந்து எதிர்ப்பு தெரிவித்தால் தமது ஆட்சிக்கு ஆபத்து என்று உணர்ந்த ஆங்கிலேயர்கள், பெருவாரியான மக்களை கொண்டத சிங்களருக்கு மட்டும் முன்னுரிமை கொடுத்தனர். 1931 ஆம் ஆண்டு டொனமூர் அரசியலமைப்பு உருவாக்கப்படுகிறது. இது அனைவருக்கும் ஓட்டுரிமை அளிக்கிறது. ஆனால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் எண்ணிக்கை, ஒவ்வொரு இனத்தின் மக்கள்தொகைக்கு ஏற்ப இருக்க வேண்டும் என்று கட்டளையிடுகிறது. இது தமிழர்களுக்கு அதிர்ச்சியளிக்கிறது. ஏனென்றால் இந்த அரசியலமைப்பு தமிழர்களை சிறுபான்மையினராக மாற்றுகிறது. இனி சிங்களர்கள் தமிழர்களோடு இணைய மாட்டார்கள் என்பதை தெரிந்து G.G.பொன்னம்பலம் என்பவர் தமிழர் உரிமைக்காக பாடுபட சிலோன் தமிழ் காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்குகிறார். சிங்களருக்கும் தமிழருக்குமான அரசியல் பிளவு இவ்வாறு தான் ஆரம்பித்தது. இந்த பின்னனியில் தான் தமிழகம் 1955 ஆம் ஆண்டு இந்தியை எதிர்த்தது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

1919 ஆம் ஆண்டு வரை தமிழுக்கு நண்பனாக இருந்த சிங்கள மொழி, 1931 ஆம் ஆண்டு அரசியல் ரீதியாக எதிரியாக மாறுகிறது. இது போலவே 1955 ஆம் நண்பனாக உள்ளே நுழைய முற்படும் இந்தி பின்னாளில் எதிரியாக மாறிவிடுமோ என்ற அச்ச உணர்வே நம் இந்தி எதிர்ப்புக்கு பிரதானம். அதை விடுத்து தமிழ் மொழி மிக தொன்மையான மொழி அதனால் தான் இந்தியை எதிர்க்கிறோம் என்பது பிதற்றல். உலகில் தோன்றிய ஒவ்வொரு மொழிக்கும் அதற்கான வரலாறு, கலை, இலக்கியம், பண்பாடு இருக்கிறது. இதில் யார் மேம்பட்டவர் யார் முதன்மையானவர் என்று கேட்பது சிறுபிள்ளைத்தனம்.

இந்த ஆண்டு இந்தி திணிப்பு வருகிற போது முதலில் உச்ச குரலில் எதிர்ப்பு தெரிவித்தது தமிழகமே. ஏனென்றால் தமிழ் சிறுபான்மையினர் மொழியாக கருதப்பட்டதால் இலங்கையில் ஒரு லட்சம் உயிர்களை பலி கொடுத்துள்ளோம். தமிழகத்தை தொடர்ந்து கர்நாடகமும், மேற்கு வங்கமும் குரல் கொடுக்கிறதென்றால் அது அரசியல் சார்ந்தது. அங்கு பாஜக காலூன்றி விட்டது. ஆனால் தமிழகத்தில் தமிழ் சிறுபான்மையான மொழியாக மாறிவிடக்கூடாது என்ற அச்ச உணர்வே எதிர்ப்பு குரலாக மாறுகிறது.
இந்தி பிரசார சபா ப்ராத்மிக், மதியமா போன்று இந்தி வகுப்புகள் நடத்தி வருடந்தோறும் நான்கு லட்சம் பேர் இந்தியில் தேர்ச்சி பெற வைக்கிறது. அதன் தலைமை அலுவலகம் சென்னையில் தான் உள்ளது. 1936 ஆம் ஆண்டு முதல் இயங்கிக்கொண்டிருக்கிறது எவ்வித பிரச்சனையின்றி. இங்கு 4000 CBSE பள்ளிகள் இயங்குகின்றன. அதனால் தமிழ்நாட்டில் இந்தி கற்றுக்கொள்வது பிரச்சனையில்லை. ஆனால் அரசு ஆணையாக ‘இந்தி’ வருகிற போது அது அரசியல் ஆகிறது. ஒரு மொழி இன்னொரு மொழி மீது ஆதிக்கம் செலுத்த நினைக்கிறது. வங்காள தேசத்தில் நடந்தது போல, இலங்கையில் நடந்தது போல். அது தமிழ்நாட்டில் நடக்காமல் பார்த்துக் கொள்வோம்.

கட்டுரைக்கு உதவிய நூல் - தமிழக அரசியல் வரலாறு - ஆர்.முத்துக்குமார் மற்றும் wikipedia.

Monday, June 3, 2019

மொழிக் கொள்கையும் தமிழுணர்வும் -1

மொழிக் கொள்கை பற்றி நடந்து கொண்டிருக்கும் பிரச்சனையில் சில நாடுகளை பற்றி நான் குறிப்பிட விரும்புகிறேன்.முதலில் அமெரிக்கா.
ஏன் அமெரிக்காவில் பிறக்கும் இந்தியா வம்சாவளி குழந்தையை நாம் ABCD(America Born Confused Desi) என்று அழைக்கிறோம். ஏனென்றால் வீட்டில் ஒரு மொழி. வெளியே வேறொரு மொழி. வீட்டில் ஒரு கலாச்சாரம். வெளியே ஒரு கலாச்சாரம். அந்த குழந்தை குழம்பிப் போகிறது.

நான் அமெரிக்காவில் பணிபுரிந்ததால் என் அனுபவத்தை பகிர விரும்புகிறேன். நான் பார்த்த வரையில் தமிழ் குடும்பத்தில் பிறந்த குழந்தை ‘அம்மா’, ‘தாத்தா’ என்று ஆர்ம்பித்து ஒவ்வொரு வார்த்தையாக பேச ஆரம்பிக்கும். பிறகு இரண்டு மூன்று ஆண்டுகளில் ஓரளவு தமிழ் கற்றுக்கொள்ளும். ஆனால் ஐந்து வயதில் பள்ளியில் காலடி வைத்தவுடன் பெற்றோர்கள் தமிழில் கேள்வி கேட்டால் குழந்தை ஆங்கிலத்தில் பதில் சொல்லும். தமிழில் பேச சொல்லி பெற்றோர்கள் எவ்வளவு வற்புறுத்தினாலும் அது தமிழில் பேசாது. அமெரிக்காவில் எல்லா மாகாணங்களிலும் தமிழ்ச் சங்கம் உள்ளது. ஏனென்றால் அங்கிருக்கும் பெற்றோர்களுக்கு நம் மொழியும் கலாச்சாரமும் நம்முடன் அழிந்து விடுமோ என்ற பதட்டம் உள்ளது. பரதம் கற்றுகொடுப்பார்கள். வயலின் கற்றுக்கொடுப்பார்கள். பட்டுப்பாவாடை அணிவிப்பார்கள். ஆனால் குழந்தைகளுக்கு தமிழ் உச்சரிப்பு மட்டும் வரவே வராது. அமெரிக்காவில் நடந்து கொண்டிருப்பது தமிழ் வகுப்பு அல்ல தமிழ் திணிப்பு.

அமெரிக்காவில் நான்கு தமிழ் குடும்பங்கள் ஒன்று சேரும்போது ‘நான் ஊர்ல இருக்கறப்போ’ என்று அவர்கள் ஆர்ம்பிக்கும் போது முகத்தை பார்க்க வேண்டும். அவ்வளவு பிராகசமாய் இருக்கும். இது நான் மிளௌரியில்(Missourie) கண்ட காட்சி. தன் ஊரை பற்றி தன்னுடைய மொழியில் பேசும் போது மட்டும் ஏன் அவர்கள் முகம் மலர்கிறது? 'when I was in my town' என்று ஆர்ம்பித்திருக்க வேண்டியதுதானே? இதற்கு விடை வேண்டுமென்றால் அதற்கு மொழி என்றால் என்ன என்று தெரிந்திருக்க வேண்டும். இதற்கான விடையை உங்கள் மூளையிடம் கேட்டால் ‘மொழி என்பது கருத்தை மனதில் உருவாக்கவும் அதை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்ள உதவும் கருவி ’ என்று தட்டையாக பதில் சொல்லும். ஆனால் மனமோ  ’மொழி என்பது உணர்வுகளின் வெளிப்பாடு’ என்று கூறும். எது சரியான பதில் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

பெற்றோர்களும் அவர்கள் சுற்றியுள்ள நான்கு குடும்பங்களும் தமிழில் பேசினால் அவர்கள் குழந்தைகளும் தமிழ் பேசும் என்று நம்புவது யதார்த்தத்தில் உண்மையில்லை. முதலில் மொழி மறையும். பிறகு உணவுப் பழக்கம் மாறும். ஏனென்றால் அமெரிக்கர்களுக்கு சமைக்கும் பழக்கும் கிடையாது. நான்காவது தலைமுறை வளரும் போது அங்கு தமிழ் குடும்பம் இருந்ததற்கு எந்த அடையாளமும் இருக்காது. இந்த உண்மை உறுத்திக்கொண்டிருப்பதால்  தான் அங்கு கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் பெரும்பாலான சர்ச்சைகள் மீண்டும் இந்தியாவுக்கு நிரந்தரமாக திரும்பிச் செல்வது பற்றியே இருக்கும்.

அமெரிக்காவில் தமிழ் கற்றல் என்பது மொழி சார்ந்த பிரச்சனை அல்ல இது நிலம் சார்ந்த பிரச்சனை. ஒவ்வொரு தலைமுறையும் முன்னேறும் போது தனக்கு  தேவையானவற்றை எடுத்துக்கொண்டு தேவையில்லாதவற்றை விலக்கிவிடும். இது இயற்கையின் நியதி. அமெரிக்க வாழ் குழந்தைகளுக்கு தமிழ் என்பது தேவையற்ற ஒன்று. அதனால் தான் பெற்றோர்களின் வற்புறுத்தலால் தமிழ் வகுப்புகளுக்கு சென்றாலும் அவர்களுக்கு அதில் நாட்டம் இருப்பதில்லை. நாளடைவில் தமிழை மறந்தும் விடுகிறார்கள்.

ஒன்றை பெற வேண்டுமானால் இன்னொன்றை இழக்க வேண்டும். இது இயற்கையின் மற்றொரு நியதி. இந்தியாவில் இருந்து அமெரிக்கா புலம் பெயர்ந்த அனைத்து குடும்பங்களும் அடைந்தது மிகப்பெரிய பொருளாதார முன்னேற்றம். இழந்தது அவர்களுடைய மொழியை. அதனோடு இயைந்த பண்பாட்டை. தான் பெற்ற நன்மைக்காக தான் இழந்தது சரியானதா என்று அவர்கள்  தான் சீர்தூக்கி பார்க்க வேண்டும்.

ஒரு மொழியை அழிக்க வெளியில் இருந்து யாரும் வரத்தேவையில்லை. உன் தாய் மண்ணை விட்டு வெளியேறினால் போதும். இரண்டு மூன்று தலைமுறைகளில் அது தானாக அழிந்து விடும். இது தான் அமெரிக்காவில் நடந்து கொண்டிருக்கிறது. அதனால் மீண்டும் ஒருமுறை கூறிக்கொள்கிறேன் மொழி கற்றல் என்பது மொழி சார்ந்த பிரச்சனையல்ல நிலம் சார்ந்த பிரச்சனை.

(தொடரும்)

Friday, May 31, 2019

சுதந்திர இந்தியாவில் தலித் முன்னேற்றம்

காலங்கள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை. செல்வாக்குடன் சமூகத்தில் முன்னகர்ந்து வரும் ஒரு மேல் சாதி.  அந்த சாதியின் முகமாக ஒரு சாதித் தலைவன். அவனால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு சாதிக்கட்சி. அமைப்பாகவும் கட்சியாகவும் வளர்ந்த பிறகு அவர் கீழ்நிலையில் உள்ளோர் மீது நடத்தப்படும் தாக்குதல்கள். இதை படிக்கும் போது வன்னியர் தலித் மக்களுக்கிடையே தற்போது நடந்த கொண்டிருக்கும் பிரச்சனைகளும்  அதில் வன்னியர் தலைவனாக ராமதாஸும் தலித் தலைவனாக திருமாவும் உங்கள் நினைவில் வந்து போகலாம். 

இராமநாதபுரத்தில் 1957 ஆம் ஆண்டு முதுகுளத்தூர் சட்டமன்ற தேர்தல் நடந்த போதும் இதே நிலைமை தான். அன்று தேவர் கூட்டத்தின்  தலைவனாக முத்துராமலிங்க தேவர். அவர் தலைமை ஏற்று நடத்திய கட்சி பார்வார்டு ப்ளாக் கட்சி. ராமநாதபுரம் மாவட்டத்தில் எப்பொழுதுமே தேவர்களுக்கும் பட்டியல் இன மக்களுக்கும் இடையே ஆன சாதிக் கலவரங்கள் எறிந்து கொண்டிருக்கும். 
பட்டியல் இன மக்களுக்கென தனி கட்சியோ தலைவனோ கிடையாது. அன்று அவர்கள் அனைவரும் காங்கிரஸ் பின்னே சென்றனர்.

முத்துராமலிங்க தேவர் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதால் தனது முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். தேர்தல் கமிஷன் இடைத்தேர்தலுக்கு ஏற்பாடு செய்தது. பார்வார்டு ப்ளாக் கட்சி சார்பாக சசிவர்ண தேவர் நின்றார். அவரே வெற்றியும் பெற்றார். ஆனால் அவர்களை எதிர்த்து நின்ற காங்கிரஸூக்கு தலித்துகள் கணிசமான ஓட்டளித்ததால் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர் தேவர் குலத்தவர். பிறகு அது சாதிக் கலவரமாக மாறியது. 

மாவட்ட ஆட்சியர் சமரசம் செய்ய இரு தரப்பையும் அழைத்தார். தேவர்கள் சார்பாக முத்துராமலிங்க தேவரும், தலித்துகள் சார்பாக இமானுவேல் சேகரும் ஆஜரானர்கள். முத்துராமலிங்க தேவரால் தனக்கு சரி சமமான தலைவனாக இமானுவேலை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இமானுவேல் சேகர் தேவரைவிட வயதில் மிகமிக இளையவனாக இருப்பதும் ஒரு காரணம். மாவட்ட ஆட்சியரின் சமரச முயற்சி தோல்வியில் முடிந்தது. சாதிக் கலவரம் ஊர் ஊராக பரவிக்கொண்டிருந்த நேரத்தில் அதன் உச்சமாக இமானுவேல் சேகரன் பரமக்குடியில் கொலை செய்யப்பட்டார். முதல் குற்றவாளியாக முத்துராமலிங்க தேவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். பிறகு பல்வேறு காரணங்களால் அவர் விடுதலை செய்யப்பட்டார். 

இந்த சம்பவம் நடந்து அறுபது வருடங்கள் மேலாகிறது. இன்று தேவர் பூசை மூன்று நாள் அரசு விழாவாக கொண்டாடும் அளவுக்கு தேவர்களின் செல்வாக்கு உயர்ந்துள்ளது. தமிழகத்தின் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தேவர் சமூகத்தை சேர்ந்தவர். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் தேவர் பூசைக்கு இணையாக இமானுவேல் சேகரனின் நினைவு நாளும் பல இடையூருகளுக்கு  நடுவே அனுசரிக்கப்படுகிறது. இன்று தலித் மக்களுக்கென்று விடுதலை சிறுத்தைகள் என்ற கட்சி உண்டு. அதற்கு திருமா என்ற தலைவன் உள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி என்றாலே கட்டப்பஞ்சாயத்து என்ற பிம்பம் இங்கு உருவாக்கப்பட்டுள்ளது. ஆம் கட்டப்பஞ்சாயத்துகாரர்கள் தான். அரசு பள்ளிகளில் படிக்க வைத்து தலித்துகளின் கல்வியறிவை மேம்படுத்தினாலும் தொழில் என்று வரும்பொழுது சிறிய அளவிலான வணிகத்தையோ அல்லது சுயதொழிலையோ நம்பித்தான் பிழைப்பு நடத்த வேண்டியுள்ளது. போட்டி நிறைந்த உலகத்தில் தனது சுயதொழிலை காப்பாற்றிக்கொள்ள அரசியல் பின்புலம் தேவையாக இருக்கிறது. தலித்துகளின் உருவாகி வரும் இந்த சிறிய முதலாளிகளை காப்பாற்ற விடுதலை சிறுத்தைகள் பின்னனியில் இருந்து கட்டப்பஞ்சாயத்து செய்வது அவர்கள் கடமை. தொழிலை காப்பாற்றுவதற்கு மட்டுமல்ல தலித்துகளிடம் இருக்கும் சொற்ப நிலத்தையும் காப்பாற்றுவதற்கு இந்த கட்டப்பஞ்சாயத்து தேவை.

பல அரசியல் சமரசங்களுக்கிடையே இன்று திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் திருமாவளவன், இந்த முறை சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் போது ஸ்டாலினின் விருப்பத்திற்கேற்ப உதயசூரியனில் போட்டியிட்டுருந்தால் இந்தளவு ஒடுக்குமுறை நடக்காமல் இருந்திருக்கலாம். ஒடுக்கப்பட்டோருக்கென ஒரு இயக்கம் இருக்கிறது அதற்கு மக்களின் ஆதரவு இருக்கிறது என்பதை பறைசாற்றவே தனிச்சின்னத்தில் போட்டியிட்டார். தேர்தலுக்கு பத்து நாள் முன்பு தான் பானை சின்னம் ஒதுக்கப்பட்டது. மிக சொற்பமான வாக்கு வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றாலும், மேலாத்திக்க சாதிகளின் தடைகளையும், அதற்கு துணையாக நின்ற அதிகார வர்க்கத்தின் கட்டுபாடுகளையும் தகர்தெறிந்து அவர் பெற்ற வெற்றி இமாலய சாதனையே.

அவர்கள் போக வேண்டிய தூரம் நெடியதாக இருந்தாலும் நிதானமாக அதே நேரத்தில் மிக திடமாக முன்னேறிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.